புதுச்சேரி, ஜூன் 2: ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி புதுவை பெண்ணிடம் ரூ.1.28 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கதிர்காமம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி பாக்கியலட்சுமி ரூ.1.28 லட்சத்தை முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்துள்ளார். பின்னர் பாக்கியலட்சுமி சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்றபோது, பணம் வரவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
புதுச்சேரி பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் பிளிப்கார்ட்டில் டீ சர்ட் ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சக்திவேலை தொடர்பு கொண்டு, தங்கள் ஆர்டர் செய்த டீ சர்ட் மூலம் குலுக்கல் முறையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் கிடைத்துள்ளது. இந்த பரிசை பெறுவதற்கு முன்பணம் கட்டுமாறு கூறியுள்ளார். இதைநம்பி சக்திவேல் ரூ.45 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் மர்ம நபர் அனைத்து இணைப்புகளையும் துண்டித்து விட்டார். பின்னர் சக்திவேல் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2 பேரும் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.