புதுவை செஞ்சி சாலையில் ஏசி மெக்கானிக் மீது பீர்பாட்டில் தாக்குதல்

புதுச்சேரி, அக். 25: புதுவை செஞ்சி சாலையில் ஏசி மெக்கானிக் மீது பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுவை குருசுகுப்பம், மரவாடித் தெருவைச் சேர்ந்தவர் நிஜந்தன் (23). ஏசி மெக்கானிக்கான இவர் ஆயுத பூஜை தினமான நேற்று முன்தினம் முதலியார்பேட்டையில் ஒரு வீட்டுக்கு ஏசியை சர்வீஸ் செய்ய சென்றுள்ளார். அங்கு பணிகளை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், செஞ்சி சாலையில் வைத்திகுப்பத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் குடிபோதையில் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டிருந்தார்களாம்.

இதை பார்த்த நிஜந்தன், அவர்களை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் நிஜந்தனை பீர்பாட்டிலால் சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக பெரியகடை காவல் நிலையத்தில் நிஜந்தன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிஜந்தனை தாக்கியது வைத்திக்குப்பத்தை சேர்ந்த ஜான்சன், கோபால், கனிஷ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குபதிந்த போலீசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை