புதுவையில் 5 பேரிடம் ₹11.92 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, ஜூன் 10: புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.11.92 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்த நாராயணன் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற கூறியுள்ளார். இதை நம்பி நாராயணனும், மர்ம நபர் வழங்கிய ஆப்பில் ரூ.3.69 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முயன்றபோது கூடுதல் பணம் கட்ட வேண்டும் என்று ஆப்பில் கூறப்பட்டது. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது. இதேபோல் ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் ஜெயின் என்பவரும் மர்மநபர் கொடுத்த லிங்க் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.3.90 லட்சத்தை இழந்துள்ளார்.

காரைக்கால் பகுதியை சேர்ந்த கோமதி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார் இதை நம்பி கோமதியும் ரூ.2.90 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இதேபோல் மாகே பகுதியை சேர்ந்த மினி வலசுராஜன் என்பவரும் ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி ரூ.1.30 லட்சம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

திருபுவனை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஆப் மூலம் லோன் பெற்றுள்ளார். பின்னர் பெற்ற லோனை, வட்டியுடன் சில தினங்களுக்கு முன் அடைத்துள்ளார். அப்போது மர்ம நபர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு விஜயகுமாரின் புகைப்படத்தை மார்பிங் செய்து கூடுதல் பணம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார். இதற்கு பயந்து விஜயகுமார் ரூ.13 ஆயிரத்தை மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். மேற்கூறிய நபர்கள் 5 பேர் ரூ.11.92 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை