புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து முன்னணி அமைப்புகள் சார்பில், நேற்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. மேலும் அரசு பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக, புதுவை பஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்புடன் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பாஜ தொழிற்சங்கம் ஆதரவு காரணமாக டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் பஸ்கள் ஓடாததால் மாணவர்கள் பள்ளி செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. பஸ்களை இயக்கும் தனியார் பள்ளிகள் மட்டும் மூடப்பட்டன. அங்கு நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகள் வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. இந்நிலையில், தமிழக அரசின் 6 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் டிரைவர்கள், சில பயணிகள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். கல்வீச்சு மற்றும் வியாபாரிகள் மிரட்டல் சம்பவங்களில் 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் தமிழக அரசு பஸ்கள் அடுத்தடுத்த உடைப்பு சம்பவத்தால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லை வரை பாதுகாப்பு அளித்து அனுப்பி வைக்கப்பட்டன. 150க்கும் மேற்பட்டோர் அசோக் பாபு எம்எல்ஏ தலைமையில் புதிய பஸ் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். …