திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணையில் வர்ணம் பூசும் பணி நடப்பதால் கல்லணை புதுப்பொலிவு பெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்டா பாசனத்திற்காக வருடம் தோறும் மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அது போல இவ்வாண்டும் மேட்டூரில் தண்ணீர் தற்போது இருப்பு 107.08 அடியாக உள்ளதால் வரும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்து கல்லணையில் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஷட்டர்கள் அனைத்தும் பழுது நீக்கம் செய்யப்பட்டு ஏற்றி இறக்கி பார்ப்பதுடன் முழுவதும் வர்ணம் பூசும் பணி நடப்பது வழக்கம். அது போல இவ்வாண்டும் அனைத்து ஷட்டர்களும் பழுது பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் அணையின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கல்லணை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி தொடங்கவுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்….