புதுக்கோட்டை, பிப்.4: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே ஆடைகள் இன்றி சாலையோரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கிடைப்பதை அறிந்த புதுக்கோட்டை ஆர்டிஓ சம்பவ இடத்திற்கு உடனே சென்று அந்த பெண்ணை மீட்டு மாவட்ட மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே பட்டுக்கோட்டை சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ஆடைகள் இன்றி சாலை ஓரத்தில் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற இளம்பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணுக்கு ஆடை அணிவித்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து அந்த பெண்ணை புதுக்கோட்டையில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.