ராமநாதபுரம், ஜூலை 6: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், குற்றவியல் சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதம், ஹிந்தி மொழியில் மாற்றியிருப்பதைக் கண்டித்தும், புதிய சட்டங்களை அமல்படுத்தியிருப்பதை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் இப்ராஹீம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கருணாகரன், முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைபோன்று, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் மனோகரன், மகேந்திரன், காளீஸ்வரன், சரவணபாபு, கார்த்திகை ராஜா, வீரக்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.