திருவண்ணாமலை ஜூன் 12: திருவண்ணாமலை கிரிவல பாதையில் கழிப்பறைகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பவுர்ணமி நாட்களில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மேலும். பவுர்ணமி அல்லாத நாட்களிலும் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கிரிவலப்பாதையில் கூடுதலான இடங்களில் பொது கழிப்பறைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கிரிவல பாதையில் புதிதாக கட்டப்படும் கழிப்பறைகளை கூடுதல் கலெக்டர் ரிஷப் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கழிப்பறைகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் சரண்யா தேவி, பிடிஓ அருணாச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.