புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம், ஏப். 12: சேலம் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தற்காலிக சிகிச்சை மையங்களில் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு ஸ்வாப் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து மட்டும் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் 2 பேருக்கும், இடைப்பாடியில் ஒருவருக்கும் என சேலம் சுகாதார மாவட்டத்தில் 3 பேருக்கும், பெத்தநாய்க்கன்பாளையத்தில் 2 பேர், அயோத்தியாபட்டணத்தில் 2 பேர், கெங்கவல்லியில் 2 பேர், தலைவாசலில் ஒருவர் என ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கும், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு வீடுகளிலும் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை