மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளியின் 16 வயது மகள், அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த மாதம் 20ம் தேதி பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 21ம் தேதி மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மாணவியின் செல்போன் எண்ணிலிருந்து கடைசியாக பேசிய எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசியபோது, அந்த எண்ணுக்கு உரியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அரூரை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து வையம்பட்டி போலீசார், அரூர் போலீசார் உதவியுடன் குமார் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்த குமாரின் மனைவி கோமதி அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறினார். அதில் முகநூல் மூலம் பழகி பிளஸ்2 மாணவியை தனது கணவர் குமார் கடத்தி வந்து விட்டார். அன்றிலிருந்து வீட்டுக்கே வருவதில்லை. எனக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வயது குறைவான தன்னையே மதுரையிலிருந்து ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு பல பெண்களை முகநூல் மூலம் பழகி ஏமாற்றி உள்ளார் என்றார். இதையடுத்து குமாரின் செல்போன் சிக்னல் பெங்களூருவில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதனால் வையம்பட்டி போலீசார், பெங்களூரு போலீசார் உதவியுடன் குமாரை தொடர்பு கொண்டபோது, மாணவி தன்னுடன் இருப்பதாக கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதையடுத்து 45 வயது முகநூல் மன்மதனை பிடிக்க முடியாமல் பெங்களூருவில் இருந்து வையம்பட்டி போலீசார் திரும்பி வந்து விட்டனர். பிளஸ்2 மாணவி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் மீட்டு தராததால் அவரது பெற்றோர் கவலையடைந்துள்ளனர். தனது மகளை மீட்டுத்தர காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்னர்….