சேலம், அக்.20: சேலத்தில் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்தது தொடர்பாக பிரபல பிரியாணி கடைக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ்அளித்துள்ளனர். சேலம் 5ரோடு அருகே பிரபல பிரியாணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், தாரமங்கலத்தை சேர்ந்த மோகன்ராஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர்கள் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மோகன்ராஜ் சேலம் மாவட்டஉணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் அளித்தார். அப்புகாரின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் அக்கடைக்கு சென்று ஆய்வு செய்தார்.
சமையல் கூடம், சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனைமேற்கொண்டார்.அப்போது கடையில் உணவு குப்பை கூடைகள் மூடப்படாமல் இருப்பது தெரிந்தது. உடனே அவற்றை மூடி வைக்க வேண்டும் என அதிகாரிகள் கடை பணிகளர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஓட்டல்களில் அடிக்கடை சோதனை செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது தொடர்பாக அந்த பிரியாணி கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது, என்றனர்.