புதுடெல்லி: பிரதமர் கேர் நிதியில் இருந்து வாங்கப்பட்ட வென்டிலேட்டர், பிரதமர் இரண்டு பேருமே அவர்களது பணியை செய்வதில் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து மத்திய அரசு வென்டிலேட்டர்களை வாங்கியது. பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் தொழில்நுட்ப கோளாறால் சரியாக இயங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனிடையே மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவது குறித்து தணிக்கை செய்யும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், “பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் மற்றும் பிரதமர் மோடி இடையே நிறைய ஒற்றுமை இருக்கின்றது. இரண்டு பேருமே தங்களது வேலையை செய்ய தவறிவிட்டனர். நமக்கு தேவைப்படும்போது இரண்டுமே இருப்பதில்லை” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் ராகுல், ‘‘கொரோனாவை கையாள்வதில் மட்டுமல்ல, மக்களுடன் துணை நிற்பதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. தினந்தோறும் மனவலிமைமிக்க பல தனிநபர்களின் தியாகங்களை கேள்விப்படுகிறோம். தன்னலம் கருதாத பல ஹீரோக்கள் இன்று பிறருக்கு சேவை செய்து, இந்தியாவின் வலிமையை உலகுக்கு நிரூபிக்கின்றனர்’’ என்றார்….