புதுடெல்லி: ‘அரசை விமர்க்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது தேசத் துரோக வழக்கை பதிவு செய்யக் கூடாது,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களையும், ராணுவ வீரர்களின் உயர் தியாகங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்,’ என தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து வினோத் துவா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சில தினங்களுக்கு முன் ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘அரசை விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக யார் மீதும் தேசத் விரோத வழக்கை பதிவு செய்யக் கூடாது. ஒரு குறிப்பிட்ட நபருடைய செயல் வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருந்தால் மட்டுமே அதுபோன்ற வழக்கை பதிவு செய்ய வேண்டும். இதை பலவேறு முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளது. அப்படி இருக்கையில், பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் கருத்துகள் எதையும் கூறாத வினோத் துவா மீது எப்படி தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய முடியும்? இது, அதிகார துஷ்பிரயோகம். அவர் மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது,’ என நீதிபதிகள் தெரிவித்தனர். …