சென்னை: மோடி தொடங்கி வைக்கும் செஸ் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணிக்கின்றனர் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை:முறையற்ற ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, சி.பி.ஐ, ஒன்றிய வருமான வரித்துறையை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றது ஒன்றிய அரசு. ஜனநாயகத்திற்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்கும் வகையிலும் செயல்படும் ஒன்றிய பாஜ அரசின் கொள்கைகளை எதிர்த்து, பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானதுதானே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல….