புதுடெல்லி: இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ்சை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் கடந்த 6ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலமாக இங்கிலாந்து பிரதமர் லிஸ்டிரஸ்சை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புதிய பிரதமராக பதவியேற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்காக இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மேலும், இரு தரப்பு நலன் சார்ந்த விஷயங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் லிஸ் டிரஸ் பேசினர். இந்தியா, இங்கிலாந்து இடையே உறுதியான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்….