நாமகிரிப்பேட்டை, ஜூன் 27: நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் 10,297 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது ஜூலை முதல் வாரத்தில், 14வது தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளது. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 1097 பேர், இ-கேஒய்சி மேற்கொள்ளாமல் உள்ளனர். மேலும், 817 பேர் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காமல் உள்ளனர். தற்போது நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் வேளாண்மை துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இம்முகாமில் 13வது தவணை தொகை கிடைக்கப்பெறாதவர்கள், ஆதார் எண்ணுடன் இ-கேஒய்சி பதிவு செய்ய வேண்டும். பதிவு மேற்கொண்டால் மட்டுமே, 14வது தவணை தொகை கிடைக்கப்பெறும். எனவே, விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர் அல்லது நாமகிரிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையம், அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி பதிவேற்றம் செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.