மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியை கடந்த 2020ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதான குற்றவாளி தனக்கு ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், டிஎன்ஏ பரிசோதனையில் சிறுமியின் கருவில் உள்ள குழந்தைக்கு தான் தந்தை அல்ல என உறுதியாகி உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென கோரினார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்ரே, அவருடைய மனுவை தள்ளுபடி செய்தார். நீதிபதி தனது தீர்ப்பில், ‘டிஎன்ஏ சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தை நம்ப மறுக்க எந்த காரணமும் இல்லை. பலாத்கார வழக்குகளில் டிஎன்ஏ சோதனை என்பது உறுதியான ஆதாரம் என்று கூற முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நபர் பணம் கொடுத்து குற்றத்தை மறைக்கப் பார்த்துள்ளார். எனவே, டிஎன்ஏ சோதனை முடிவு எதிர்மறையாக இருக்கும் சமயங்களில், வழக்கின் மற்ற தகவல்களை பரிசீலிக்க வேண்டியது அவசியம்,’ என உத்தரவிட்டுள்ளார்….