பாலியல் துன்புறுத்தலில் மாணவி தற்கொலை: மேலும் 2 பேர் கைது

கோவை: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மாணவி தான் படித்த தனியார் பள்ளியின் ஆசிரியர் மற்றும் சிலரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக, கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.தற்கொலை செய்த மாணவி, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்த போது பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (32) என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. மாணவி தற்கொலை செய்யும் முன் அவர் செய்த டார்ச்சர் தொடர்பாக எழுதிய கடிதமும் சிக்கியது. இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்தனர்.மாணவி தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தில் என்னை துன்புறுத்திய யாரையும் சும்மா விடக்கூடாது என எழுதியிருந்தார். மேலும், சில ஆண்டிற்கு முன் மாணவியை உக்கடத்தை சேர்ந்த 2 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவலையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ெதாடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் உக்கடத்தை சேர்ந்த முகமது சுல்தான் (70)  மனோராஜ் (58) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இவர்கள் மாணவிக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் எனவும், மாணவி சில ஆண்டிற்கு முன் இந்த நபர்களின் வீட்டிற்கு சென்ற போது ஆள் இல்லாத நேரத்தில் இவர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. தனக்கு நேர்ந்த அவலத்தை அப்போது மாணவியால் வெளிப்படுத்த முடியவில்லை. கடிதத்தில் குறிப்பிட்ட இந்த 2 பேரையும் 8 மாதமாக போலீசார் கைது செய்யவில்லை.இந்நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்னர், கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் போக்சோ குற்றவாளிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கைதான 2 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்….

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்