தஞ்சாவூர் ஜூலை 31: பாலவிநாயகர் கோயிலில் ஆடிக்கிருத்திகை பால்குட ஊர்வலம் நடந்தது. தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள பால விநாயகர் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவேரி நகர் தெற்கில் உள்ள ஆனந்த மகா கணபதி கோயிலில் காலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று வங்கி ஊழியர் காலனி பாலவிநாயகர் கோயிலை அடைந்தனர்.
இதையடுத்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர், நகர மக்கள் செய்திருந்தனர்.