திருவள்ளூர்: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் நாராயணபுரம் பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த சாலை அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்ல முக்கியமானதாக இருந்து வருகிறது. தரைப்பாலம் சேதமடைந்ததால் கடந்த 2011ம் ஆண்டு 11 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணி கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடப்பதால் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்லவே போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையே இருப்பதால் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரைப்பாலம் குறுகலாக இருப்பதால் கனரக வாகனம் செல்லவும் சிரமமாக இருக்கிறது என்று வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். மேம்பால பணிகளை விரைந்து முடிக்காமல் பட்டறை பெருமந்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். பட்டறை பெருமந்தூர் நாராயணபுரம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகி அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குறிப்பிட்டுள்ளனர்.