ஊட்டி: பார்க்கிங் தளங்களில் ஊட்டி நகராட்சி சார்பில் மொபைல் டாய்லெட்கள் வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இம்முறையும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஊட்டி நகரில் பல்வேறு இடங்களிலும் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பார்க்கிங் தளங்களில் கழிப்பிடம், தண்ணீர் போன்ற வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதனால், அனைத்து பார்க்கிங் தளங்களிலும் நகராட்சி நிர்வாகம் கழிப்பிடம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றத்தர வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது ஊட்டி ஏடிசி காந்தல் மற்றும் கால்ப் லிங்ஸ் சாலை போன்ற பகுதிகளில் உள்ள பார்க்கிங் தளங்களில் நகராட்சி சார்பில் மொபைல் டாய்லட் மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அதேசமயம், என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளங்களில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. …