Saturday, June 29, 2024
Home » பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி திருவாரூர் மாவட்டத்தில் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி

பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி திருவாரூர் மாவட்டத்தில் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி

by Karthik Yash

திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் அனைவரும் புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை, தங்களது 4 முதல் 8 மாதத்திற்குட்பட்ட கிடேரி கன்றுகளுக்கு செலுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டு தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி பணிகள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டு தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லாஅபார்டஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும், இந்தநோயால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினைபிடிக்காமை, பால் உற்பத்தி குறைவால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.

இந்த நோய் வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும், இந்த நோய் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விலங்கு வழி பரவும் நோயாகும். தேசிய கால்நடைநோய் தடுப்புதிட்டத்தின் மூலமாக முதன் முறையாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் 2ம் சுற்று தடுப்பூசி போடும் பணியானது. கடந்த 15ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் (ஜுலை) 14ம் தேதி வரையில் இந்த தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தி கொண்டால், அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். இந்த தடுப்பூசி திட்டமானது, ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்த தேவையில்லை. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் அனைவரும் புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை தங்களது 4 முதல் 8 மாதத்திற்குட்பட்ட கிடேரி கன்றுகளுக்கு செலுத்தி கொள்ள வேண்டும்.

You may also like

Leave a Comment

4 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi