Tuesday, September 10, 2024
Home » பாரம்பரிய அழகுப் பொருட்கள் தயாரிப்பு! கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு!

பாரம்பரிய அழகுப் பொருட்கள் தயாரிப்பு! கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு!

by kannappan
Published: Last Updated on

“டாக்டர்… ! என் குழந்தைக்கு பன்னிரண்டு வயசு தான் ஆகுது. முடி உதிர்கிறது. இள நரை வருகிறது , முகத்தில் பரு வருகிறது, கருவளையம் வருகிறது.. என்ன செய்வது” தினசரி இப்படி புலம்பும் தாய்மார்கள் ஏராளம்.. உண்மை தான், நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் முகப்பருவோ, இளநரையோ, முடிஉதிர்தலோ வந்தால் நிரந்தரமாக இதனை தீர்க்க என்ன வழி என்று யோசிப்பதில்லை. உடனடி தீர்வினை மட்டுமே யோசித்து விளம்பரங்களில் வரும் பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துவோம். விளைவு நம்முடைய சருமம் மற்றும் கூந்தல் பாழாவது தான் மிச்சம். இதன் எதிரொலி சிறிய வயதில் இளநரை, வழுக்கை, சருமம் மற்றும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண முடியும் என்கிறார் கோவையைச் சேர்ந்த சண்முகப்பிரியா‘‘என்னுடைய பூர்வீகம் திருநெல்வேலி. தற்போது கோவையில் வசித்து வருகிறேன். என்னுடைய மகளுக்கு முகத்தில் பரு பிரச்னை இருந்தது. நான் அழகு கலை குறித்து பயின்று இருப்பதால், வீட்டிலேயே பாரம்பரிய முறையில் நலங்கு மாவுப் பொடி தயாரித்து உபயோகப்படுத்தினேன். நல்ல தீர்வு கிடைத்தது. இயற்கை சார்ந்த அழகுப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் துவக்கியதுதான் ‘பயோ நேச்சுரல் புராடக்ட்ஸ்’ நிறுவனம்.கடந்த பதினைந்து வருடங்களாக தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் நம் பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். தற்போது என் மகள் சவிதா பானு சுந்தர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இதனை கவனித்து வருகிறார். இளநரை,பொடுகு, வழுக்கை, பேன் தொல்லை, முடி உதிர்தல் மேலும் வறண்ட தோல், முகப்பரு, கரும்புள்ளி, கருவளையம் இப்படி ஏற்படக்கூடிய அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரக்கூடியவற்றை இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறோம்.நம் முன்னோர்கள் கூந்தலுக்கு சீயக்காய் மற்றும் சருமத்துக்கு மஞ்சள் தேய்த்து குளித்த காலத்தில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. தாத்தா பாட்டி ஏன் அம்மாவிற்கு கூட இப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்ததில்லை. கடுக்காய், கருஞ்சீரகம், அதிமதுரம், துளசி, செம்பருத்தி, வெட்டி வேர், சீயக்காய், வால்மிளகு, நெல்லிக்காய், வேப்பிலை, சந்தனம், ரோஜா இதழ், மல்லி, சிவப்பு சந்தனம் இவற்றை கொண்டு தயாரிக்கும் குளியல் சோப்பு மற்றும் கூந்தல் தைலம் நல்ல பலன்களை கொடுப்பதுடன் மேற்கண்ட பிரச்னைகள் வராமலும் தடுக்கிறது.வேப்பஎண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்த போது நாம் யாரும் எந்த வித சருமப் பிரச்னையை சந்தித்ததில்லை. தற்போது எல்லாமே ரசாயனம் சார்ந்து வந்துவிட்டது. இதனை உபயோகிக்கும் போதுதான் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படுகிறது. நல்லெண்ணெய், குங்கும திரவியம், அதிமதுரம் மேலும் சில மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் குங்குமாதி தைலம் மங்கு மற்றும் சருமம் வறண்டு போவதை தடுப்பதுடன் முகத்திற்கு பொலிவு தரும் நிறத்தை கொடுக்கிறது ஹேர் ஆயில், கருஞ்சீரகம், செம்பருத்தி, வால்மிளகு கொண்டு தயாரிக்கப்படுவதால் முடியின் வேர் வழியாக உள்ளே சென்று வழுக்கை வராமல் தடுப்பதுடன் பொடுகை நீக்கி கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. பொன்னாங்கன்னி கீரைச்சாறு மற்றும் விளக்கெண்ணெயும் சேர்த்து கண்மை தயாரிப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியை தருகிறது’’ என்றவர் சார்கோல் சோப், வைன் சோப், வேம்பு சோப், மல்லி சோப்… என பத்திற்கும் மேற்பட்ட சோப்களை தயாரிக்கிறார். ‘‘என்னுடைய அனைத்து சோப்களிலும் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் சேர்ப்பதால் சரும வறட்சியை தடுப்பதுடன் சருமத்தில் ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. நலங்கு மாவில் அதிமதுரம், கடுக்காய், பாசிப்பயறு, வெட்டி வேர், மஞ்சள் சேர்ப்பதால் சருமம் பளபளப்பாக இருப்பதுடன் வியர்வை நாற்றம் ஏற்படாமல், சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி புத்துணர்ச்சி தருகிறது. ரெட் ரைஸ் ஸ்கிரப், சிவப்பரிசி, வசம்பு, கடுக்காய் கொண்டு தயாரிக்கிறோம். சிவப்பரிசியை உண்பதன் மூலம் சருமத்திற்கு கிடைக்கும் அனைத்து சத்துக்களும் இப்பொடியை தேய்த்து குளிப்பதன் மூலம் கிடைக்கும். ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். வேம்பு, அரிசி, துளசியினால் செய்த பொடுகு பொடி சரும ஒவ்வாமை மற்றும் தலைமண்டை வறண்டு போகாமல் பாதுகாக்கும். பொதுவாக எல்லா பெண் குழந்தைக்கும் பேன் பிரச்னை இருக்கும். அதற்கு கடுக்காய் மற்றும் வசம்பு சேர்த்து பொடி ஒன்றை தயாரிக்கிறோம். இது பேன்களை அழித்து முடி வலுவாக இருக்க உதவுகிறது’’ என்றவர் ஆடவர்களுக்காக தாடி அடர்த்தியாக வளரவும் எண்ணெய் தயாரிக்கிறார். ‘‘மூலிகை பொருட்கள் நம்மை சுற்றி தான் உள்ளது. அதை நாம் மறந்துவிட்டோம். இனிமேலாவது அதனை நாம் பாரம்பரிய முறைப்படி பின்பற்ற பழகிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையேனும் சீயக்காய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். மேலும் இந்த தொழிலினை வீட்டில் இருந்தபடியே பெண்கள் வருமானம் பார்க்கலாம். எங்களிடம் இருந்து பொருட்கள் வாங்கி அவர்கள் லாப முறையில் விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு என ஒரு நிரந்தர வருமானம் பார்க்க முடியும்’’ என்ற சண்முகப் பிரியா ஆன்லைன் முறையிலும் தன் இயற்கை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். …

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi