திருச்சி: மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் அனைத்து கட்டணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்பு கல்லூரிகளில் 75 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 125 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதேபோல 150 ரூபாயாக இருந்த முதுநிலை மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், நாகை உள்ளிட்ட பாரதிதாசன் ஆளுமைக்கு உள்பட்ட 9 மாவட்டங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டணங்களை செலுத்தி தேர்வு எழுதலாம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளரின் ஆலோசனையின் படி தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் செல்வம் தெரிவித்துள்ளார். அடுத்த பருவ தேர்வுக்கு கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் துணைவேந்தர் கூறியுள்ளார்….
பாரதிதாசன் பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு
previous post