பாணாவரம்: பாணாவரம் சாவடி தற்காலிக பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில் பாணாவரம் சாவடி தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம், வேலூர், வாலாஜா, சோளிங்கர், காவேரிப்பாக்கம், அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள், வியாபாரிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில், பாணாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாணாவரம் சாவடியில் அமைந்துள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் பஸ், ஆட்டோ ஆகியவற்றிற்காக காத்திருக்கும் பயணிகள் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ் நிறுத்தம் பகுதி சேறும், சகதியுமாகி மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அங்கு நிரந்தரமான பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….