பாடாலூர், செப்.14: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட 1 வது வார்டில் உள்ள எழில் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தெரு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி இளையராஜா மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.