கரூர்: திருக்காம்புலியூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கை தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் இருந்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வாய்க்கால்கள் வெட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இதுபோன்ற ஒரு பாசன வாய்க்கால் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் வழியாக செல்கிறது. இந்த வாய்க்காலில் பெரும்பாலான பகுதி ஆகாயத் தாமரை செடிகள் ஆக்ரமித்துள்ளன. இதனால், தண்ணீரின் போக்கு மாறுபடும் எனவும் கூறப்படுகிறது. எனவே, இந்த பாசன வாய்க்காலில் படர்ந்துள்ள இந்த ஆகாயத் தாமரை செடிகளை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி வாய்க்காலை பார்வையிட்டு விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.