ஆத்தூர், ஜூன் 3: ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. தென்னங்குடிபாளையம், கல்பகனூர், கொத்தாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விளைநிலங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு மரங்கள் சாய்ந்து சேதமானது.
பாக்குமரத்தில் பூக்கள் துளிர்விடும் காலகட்டத்தில், முறிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர். இதேபோல், தென்னங்குடி பாளையம் கிராம பகுதியில் மின்கம்பங்கள், மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் நேற்று இரவு முழுவதும், தென்னங்குடிபாளையம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்சார துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.