கள்ளக்குறிச்சி, அக். 19: கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு மனைவி அகிலா(49). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறுவதற்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் அகிலா கை பையில் இருந்த மணிபர்சில் இருந்த ரூ.6000 பணத்தை திருடியபோது அகிலா அவரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் உதவியுடன் கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் கனகவள்ளி மற்றும் போலீசார் விசாரணை செய்ததில், தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மேட்டூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி ரஞ்சிதம்(44) என தெரியவந்தது. இது குறித்து அகிலா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சிதத்தை கைது செய்தனர்.