பஸ்சில் சென்ற விவசாயியிடம் ₹1 லட்சம் அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலை ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்

ஆரணி, டிச.12: ஆரணியில் பஸ்சில் சென்ற விவசாயியிடம் ₹1 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த 12புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(49), விவசாயி. இவரது இளைய மகன் விஜய் சென்னையில் சினிமாத்துறையில் எல்க்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், விஜய் சினிமாத்துறை சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை பெறுவதற்கு ₹1.30 லட்சம் கட்ட வேண்டும் என தந்தையிடம் தெரிவித்துள்ளார். எனவே, வெங்கடேசன் தனது வீட்டில் இருந்து ₹1 லட்சத்தை எடுத்து கொண்டு சென்னையில் உள்ள தனது மகனிடம் கொடுப்பதற்காக ஆரணி பழைய பஸ் நிலையத்திற்கு வந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது, பஸ்சில் கூட்டம் அதிகளவில் இருந்தது. எனவே பஸ்சின் நடுவில் சென்ற வெங்கடேசன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணம் இருக்கிறதா என பார்த்துள்ளார். ஆனால், பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பஸ்சிலேயே கத்தி கதறி கூச்சலிட்டார். உடனே டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி பணத்தை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை