சேலம், ஜூன் 14: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பக்கமுள்ள ஆண்டிப்பாளையம் வரகூராம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(28), சமையல் மாஸ்டர். கடந்த 2 நாட்களுக்கு முன், சேலத்திற்கு வந்த இவர், நேற்று நள்ளிரவு 1 மணிக்கு, தனது மனைவி சவுமியாவுடன் செல்போனில் பேசி, கோவைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்கிடையில் கொண்டலாம்பட்டி பக்கமுள்ள ராக்கிப்பட்டி பகுதியில், நள்ளிரவு 2 மணிக்கு தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் விபத்தில் இறந்திருக்கலாம் என விசாரித்தனர். இதில், பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.