பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியின்றி நோயாளிகள் அவதி: நடவடிக்கை கோரி போஸ்டர்

 

பொன்னேரி, மே 29: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் ஏரிக்கும், கடலுக்கும் இடையே பழவேற்காடு, கோட்டைக்குப்பம், கலங்கரை விளக்கம், தாங்கள் பெரும்புளம் ஆகிய 4 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 45 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லை. இரவு நேரத்தில் மருத்துவர்கள் தங்கி மருத்துவம் பார்ப்பதில்லை.

ஒரு செவிலியர் மட்டுமே இரவில் பணி செய்கிறார். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்த 4 பணியாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் சிகிச்சை பலனின்றி பலர் இறந்துள்ளனர். கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக இரவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை இல்லாமல் வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். மேல் சிகிச்சைக்காக பொன்னேரி மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பப்படும் அவலநிலை உள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தாரும் ஆளாகின்றனர். எனவே, பழவேற்காடு அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டும். அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் எனக்கூறி பழவேற்காடு அரசு மருத்துவமனை முன்பும், பல்வேறு இடங்களிலும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை