பழநி வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு

பழநி, ஜூன் 23: பழநி அருகே வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:பழநி அருகே சட்டப்பாறை வழித்தடத்தில் வடகவுஞ்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல நீண்ட காலமாக பாதை இருந்து வருகிறது. இப்பாதை தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதனால் மா, கொய்யா, இலவம் பஞ்சு மற்றும் இதர விளைபொருட்களை எடுத்து வர சிரமமான சூழல் உண்டாகி உள்ளது. இப்பாதை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. 16ம் செட்டில்மென்ட்டின்படி வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இப்பாதையை சரிசெய்ய பலமுறை விண்ணப்பம் செய்தும் உரிய பலனில்லை. அனுமதி வழங்கினால் கூட விவசாயிகளே சொந்த செலவில் இப்பாதையை மேம்படுத்தி கொள்ள தயாராக இருக்கிறோம். சுமார் 80 மீட்டர் தொலைவு கரட்டுப்பாதை ஒப்படைப்பு நிலம் என்று கூறுவதால் எவ்வித பணியும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு