தொண்டி,ஜூலை 22: தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தலைவி பாண்டிச்செல்வி ஆறுமுகம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்(பொ) ரமேஷ் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை வளர்மதி வரவேற்றார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்கள் மேல்படிப்பை தொடங்காதவர்கள் குறித்தும் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில் கல்வியில் சேர்ப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து உறுப்பினர்கள் அறிவுரை வழங்கினர். இதுபோல் திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைமையாசிரியர் (பொ) ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
உதவி ஆசிரியர் சாரதா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த மேலாண்மைக் குழு கூட்டத்தில் தேசிய நல்லாசிரியர்(ஓய்வு) உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.மேலும் இந்த மேலாண்மை குழு கூட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிப்பதை கண்காணிப்பது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நான்கு வண்ணக் குழுக்களாகப் பிரித்து பள்ளி வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், சமூகப்பணி ஆகியவற்றில் முழுமையாக ஈடுபடுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மேலாண்மைக் குழு கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.