மரக்காணம், மே 19: மரக்காணம் அருகே காணிமேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி (42). இவரது 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி தனது வீட்டில் இருந்து மாணவி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த மாணவியின் தாய் வனிதா கடந்த 12ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த 13ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வனிதாவின் உடலை அவரது உறவினர்கள் மரக்காணம்-திண்டிவனம் சாலையில் கந்தாடு பேருந்து நிறுத்தத்தில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பள்ளி மாணவியை எங்கள் கிராமத்தை சேர்ந்த டூ வீலர் மெக்கானிக் கோபி (27) என்பவர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுவிட்டார். இதனால் அவரை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோபியை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு, வனிதாவின் உடலையும் எடுத்துக்கொண்டு தங்களது கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.
இதை தொடர்ந்து மாணவியுடன் மாயமான கோபியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆனால் இருவரும் எங்கு உள்ளனர். யாருடைய பாதுகாப்பில் தங்கி உள்ளனர் போன்ற விவரங்கள் போலீசார்களுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. இதனால் இருவரையும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆனால் மாயமான மாணவியின் உறவினர்களோ, தினமும் மரக்காணம் காவல் நிலையத்திற்கு வந்து கோபியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து செல்கின்றனர்.