பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வினியோகம்: திருவண்ணாமலையில் இன்று முன்னோட்டம்

திருவண்ணாமலை: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னோட்டமாக திருவண்ணாமலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சத்தான உணவு பள்ளி நாட்களில் தினமும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட உள்ளது. அதையொட்டி, நகர பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த பள்ளிகளில் தனி சமையல் கூடமும் ஏற்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காலை உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1,545 தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் வரும் 15ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 17 பள்ளிகள் மற்றும் செய்யாறு நகராட்சியில் உள்ள 7 பள்ளிகள், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகள் உள்பட மொத்தம் 70 பள்ளிகளில் இத்திட்டம் வரும் 15ம்தேதி தொடங்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான முன்னோட்டம் இன்று நடந்தது. உணவு தரமாக சமைக்கப்படுகிறதா, உரிய நேரத்தில் பள்ளிக்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது சமையல் அறையில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் இன்று காலை 8 மணியளவில் உணவை சமைத்தனர். இந்த உணவு தரமாக உள்ளதா, தூய்மையாக சமைக்கப்பட்டுள்ளதா என நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து வேன்கள் மூலம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு உணவு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு சென்றடைந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. செய்யாறு நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஒரே இடத்தில் சமையல் செய்து வழங்கவும், ஜவ்வாதுமலை பகுதியில் அந்தந்த பள்ளிகளில் காலை உணவு சமைத்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்