Saturday, August 3, 2024
Home » பள்ளி ஆசிரியரை மிரட்டி ரூ.4.5 லட்சம் பறித்த சென்னை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!!

பள்ளி ஆசிரியரை மிரட்டி ரூ.4.5 லட்சம் பறித்த சென்னை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!!

by kannappan

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி ஆசிரியரை கடத்தி சென்று நான்கரை லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில் சென்னை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏழல் அருகே குறிப்பான்குளம் குப்பத்தை சேர்ந்தவர் சாலமன். இவர் அங்குள்ள அரியநாயகபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சாலமன் தம்பி தேவராஜுக்கும், சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் நாயருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு குறிப்பான்குளம் குப்பத்திற்கு சென்ற சென்னை வளசரவாக்கம் போலீசார், சாலமனை தனியாக அழைத்து சென்று தந்தையின் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அழைத்துள்ளனர். அங்கிருந்த வேனில் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் நாயர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். சாலமனை வேனுக்குள் ஏற்றிய அவர்கள், தம்பி தேவராஜ் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் சாலமனின் குடும்பத்தை மிரட்டி நான்கரை  லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக சாலமன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. சாலமன் அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஸ்கண்ணா, சிவகுமார் நாயர் உள்ளிட்ட 6 பேர் மீது ஆள்கடத்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

You may also like

Leave a Comment

fourteen + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi