பள்ளிபாளையம்: கோவையில் இருந்து பெங்களூரு வரை பெட்ரோலியம் எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய்களை பதிக்க நிலம் தேர்வு செய்யும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் கடந்த செப்டம்பர் 15ம் தேதி அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் உரிய அனுமதி பெற்ற பிறகே மேற்கொண்டு திட்டப்பணிகள் நடைபெறும் என உத்தரவாதம் கையெழுத்தானது. இதையடுத்து விவசாயிகள் போராட்டங்களை நிறுத்தி வைத்தனர்.இந்நிலையில் திருச்செங்கோடு வட்டம் ராக்காங்காட்டை சேர்ந்த விவசாயி சேகருக்கு, கடிதம் ஒன்று வந்தது. அதில், பெட்ரோலிய குழாய் பதிப்பதற்கான வால்வு அமைக்க நிலம் கையகப்படுத்தும் தனிநபர் விசாரணைக்கு 5ம்தேதி (நேற்று) காலை 9 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையை மீறி நிலம் கையகப்படுத்தும் விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் அனுப்பிய இந்த நோட்டீஸ் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து நேற்று சேகரின் நிலத்தில் சக விவசாயிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …