திருவண்ணாமலை, செப்.17: பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆய்வு கூட்ட்தில் கலெக்டர் கேட்டுக்கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் கள்ளச்சாரயம் ஒழிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், எஸ்பி பிரபாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா, கலால் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்ததாவது: மாநிலம் முழுவதும் கள்ளச்சாரயத்தை ஒழிப்பதற்காக பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் கள்ளச்சாரயம் தயாரிப்பது, குடிப்பது, விநியோகம் செய்வது மற்றும் விதிமுறைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்வது போன்ற சந்தேகத்திற்குரிய இடங்கள் மற்றும் நபர்கள் குறித்த விவரங்களை வருவாய்த்துறை சார்பாக அறிக்கை அளிக்க வேண்டும்
அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை மூலம் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், தங்களுக்குரிய பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வாரந்தோறும் நடத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும். அதன் விபரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.