பள்ளம், படுகுழிகளால் தட்டுத்தடுமாறும் வாகனங்கள் அரியமங்கலம் சுரங்க பாதையில் விபத்து அபாயம்

திருவெறும்பூர், செப்.6: திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் ரயில்வே சுரங்க பாதை பழுதடைந்துள்ளது. பள்ளம், படுகுழிகளில் விழுந்து வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். திருச்சி அரியமங்கலத்தில் பள்ளிகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், அரிசி ஆலைகள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. இங்குள்ள சாலைகளில் எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இதற்காக திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் ரயில்வே மேம்பாலம் கீழ் அமைந்துள்ள அணுகு சாலையில் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை உள்ளது.

இதன் வழியாக இருசக்கர வாகனங்கள், சரக்கு வேன்கள் பள்ளி வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இப்போது அந்த சுரங்க பாதை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அரியமங்கலம் சுரங்க பாதையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேறுவதற்கு வழியின்றி சுரங்கப்பாதையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்களும் பள்ளத்தில் இறங்கி, ஏறும் போது பழுதடைந்து விடுகின்றன. சில நேரங்களில் விபத்துக்குள்ளாகி விடுகின்றன. பள்ளத்தில் இறங்காமல் செல்வதற்காக சாலையில் இடது மற்றும் வலது புறமாக வாகனங்கள் ஓட்டி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகின்றன. இந்த பள்ளத்தினை சீரமைத்து தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவித்தால், இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்கிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால், அவர்கள் தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்கிறார்கள்.

இவ்வாறு பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அழைக்கழிக்கின்றனர். சுரங்கப்பாதை பழுதடைந்து இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் ரயில்வே சுரங்க பாதையில் ஏற்பட்டு உள்ள பழுதை நீக்கி தரமான சாலை அமைத்து தருவதுடன் மழைக்காலங்களில் மழை நீர் சுரங்கபாதையில் தேங்காமல் இருப்பதற்காக மழை நீர் வடிகால் வசதியும் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு