பள்ளத்தில் வேன் கவிழ்ந்து அண்ணன், தம்பி பலி 5 பேர் படுகாயம் கண்ணமங்கலம் அருகே புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்

கண்ணமங்கலம், ஜன.3: கண்ணமங்கலம் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அண்ணன், தம்பி பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், விவசாயி. இவர்களது மகன்கள் அருண்குமார்(21), கார்த்தி(20). நேற்று முன்தினம் இவர்கள் இருவர் உட்பட 10 இளைஞர்கள் அருகே உள்ள கிராமத்தில் விவசாய வேலைக்கு சென்றனர். பின்னர், இரவு அனைவரும் மினிவேனில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரி அருகே வந்தபோது சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த வேன் மோதியது. இதில், அருகே உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமார், கார்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 2 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருண்குமாரின் தந்தை உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று இரவு நடந்த விபத்தில் அண்ணண், தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி