Monday, October 7, 2024
Home » பல மாதங்களாக போலீசுக்கு பயந்து பதுங்கல் பிரபல ரவுடியும், பாஜ நிர்வாகியுமான டோக்கன் ராஜா அதிரடி கைது: 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு

பல மாதங்களாக போலீசுக்கு பயந்து பதுங்கல் பிரபல ரவுடியும், பாஜ நிர்வாகியுமான டோக்கன் ராஜா அதிரடி கைது: 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு

by kannappan

சென்னை: பிரபல ரவுடியும், பாஜ நிர்வாகியுமான டோக்கன் ராஜாவை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் பல்லக்குமா நகரை சேர்ந்தவர் டோக்கன் ராஜா (44), பி கேட்டகிரி ரவுடியான இவர் மீது சுமார் 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. டோக்கன் ராஜா கடந்த ஓராண்டுக்கு முன்பாக பாஜவில் இணைந்தார். இவருக்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று வெளியே வந்த டோக்கன் ராஜா, தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில், டோக்கன் ராஜா, துரைப்பாக்கத்தில் பதுங்கி இருப்பதாக ரவுடிகள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு துரைப்பாக்கம் சென்ற காவல் துறையினர், அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த டோக்கன் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ரவுடிகள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்குப் பின், டோக்கன் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பாஜவை சேர்ந்த டோக்கன் ராஜாவை போலீசார் கைது செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள பிரபல ரவுடிகள் பாஜவில் இணைந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான கல்வெட்டு ரவி, புளியந்தோப்பு தாதா அஞ்சலை, நெற்குன்றம் சூரியா, பாம் வேலு, குரங்கு ஆனந்த், சீர்காழி சத்யா, புதுவை எழிலரசி, புதுவை சோழன், புதுவை விக்கி என பலர் பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi