செங்கல்பட்டு: செங்கல்பட்டு தூய கொலாம்பா மேல்நிலைப்பள்ளியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 75வது சுதந்திர தின விழா, அமுதப் பெருவிழாவையொட்டி பல்துறை பணி விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், தூய கொலாம்பா மேல்நிலைப்பள்ளியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் 75வது சுதந்திர தின விழா, அமுதப் பெருவிழாவையொட்டி சுதந்திர போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி, தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி உள்பட பல்துறை பணி விளக்க புகைப்படக் கண்காட்சி நேற்று நடந்தது.கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன். எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியியை திறந்து வைத்தார். பின்னர் 465 பேருக்கு இருளர் வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட மொத்தம் 754 பேருக்கு ரூ.9.23 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பல்துறை பணிவிளக்க புகைப்படக் கண்காட்சி நேற்று தொடங்கி, வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை தினமும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை நடக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகராட்சி தலைவர் ஜெ.சண்முகம், நகரமன்ற துணைத்தலைவர் அன்புச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….