திருவாடானை,அக்.1:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதிக மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சாலைகளை பாதுகாக்கவும், சாலையில் சாய்ந்து விழும் மரங்களை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை செய்ய ஏதுவாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாடானை நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக ஆயிரம் மணல் மூட்டைகள் கட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜேசிபி இயந்திரம் மற்றும் சாலைகளில் மழை மற்றும் காற்றால் சாயும் மரங்களை அப்புறப்படுத்தும் வகையில் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. இப்பணிகளை திருவாடானை உதவி கோட்ட பொறியாளர் சௌந்தரராஜன், இளநிலை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் தலைமையில் சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.