சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் பருத்தி செடிகளுக்கு உரம் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், கோனூர், நவாபட்டி, கரிசல்பட்டி, கசவனம்பட்டி, இராமநாதபுரம், ஆலத்தூரான்பட்டி மற்றும் தருமத்துப்பட்டி, கட்டசின்னாம்பட்டி காமாட்சிபுரம், சில்வார்பட்டி, கதிரயன்குளம் பகுதிகளில் கரிசல்பூமி அதிகளவில் உள்ளது. இதனால் பருவ மழை பெய்த பின்பு அப்பகுதி விவசாயிகள் பருத்தி பயிரிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் ஈரப்பதத்துடன் நிலம் உள்ளதால் ஒவ்வொரு செடிகளுக்கும் உரம் வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பருத்தி பயிரிட்டுள்ள தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் பாக்டம்பாஸ் மற்றும் தழைச்சத்து உரமிட்டு வருகின்றனர். இது குறித்து பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த வருடம் பருவமழை சரியான நேரத்தில் பெய்து வருவதால் பருத்தி செடிகளுக்கு உரமிடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றனர்….