விருதுநகர், அக்.15: விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னிலையில் விவசாயிகள் மனு அளித்தனர்.
மனுவில், திருச்சுழி ஒன்றியம் பரளச்சி பிர்க்காவில் உள்ள பரளச்சி, மேலையூர், வடக்கு நத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கல், கிழக்குடி, புரசனூர், வானக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2022-23, 2023-24ம் ஆண்டு மானாவாரி விவசாயத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், பருத்தி, மல்லி, சோளம், உளுந்து, மக்காச்சோளம், சூரியகாந்தி பயிரிட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இன்று வரை வழங்கவில்லை.
பலமுறை மனு கொடுத்தும் காப்பீடுத்தொகை கிடைக்கவில்லை. மாவட்டத்தின் பிற பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், பரளச்சி பிர்க்கா விவசாயிகளுக்கு வழங்காத நிலையை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.