பரமக்குடி, ஜூலை 23: பரமக்குடியில் சட்டமன்ற தொகுதி பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சி பொதுமக்கள், பார்த்திபனூர் அருப்புக்கோட்டை சாலையில் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அங்கு நிழற்குடை இல்லாததால் வெயில் மழையில் நின்று பேருந்தில் செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால் புதிய பயணியர் நிழற்குடை கட்டித் தருமாறு எம்எல்ஏ முருகேசனிடம் நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ் கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ முருகேசன் தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நிழற்குடை அமைக்கப்பட்டது. நேற்று, எம்எல்ஏ முருகேசன் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி மேற்கு ஒன்றியகழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.