பரங்கிப்பேட்டை அருகே சென்னை ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாப பலி

 

புவனகிரி, ஜூலை 22: பரங்கிப்பேட்டை அருகே கடலில் குளித்த சென்னை ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 2 பெண்கள் உள்பட 6 ஊழியர்கள் நேற்று 4 மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சென்று சுற்றி பார்த்து விட்டு, பின்னர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு கடலில் குளித்துள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஷாம்சுந்தர்(26), கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல்பிரசாத் (26) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து மற்றவர்கள் கூக்குரல் எழுப்ப அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து புதுச்சத்திரம் போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி ஐடி நிறுவன ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி