பத்திரிக்கையாளர்கள் பெயரில் மோசடியை ஆதாரத்துடன் வாட்ஸ்அப் எண்ணில் அனுப்பலாம் கடும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் எச்சரிக்கை வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில்

வேலூர், நவ.17: வேலூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அதுகுறித்து ஆதாரங்களுடன் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பலாம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களிடம் ஏமாற்றி பணத்தைப் பறித்துவிடுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல், காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும் வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அத்தகைய நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களில் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பணம் பறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபவர்கள் மீதும், பிறரின் கோரிக்கை மனுக்களை பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042453 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவலை அனுப்பினால் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’