Saturday, September 21, 2024
Home » பத்திரப்பதிவில் சந்தை மதிப்பு வழிகாட்டி நெறிமுறை வெளியீடு: மண்டல டிஐஜிகளுக்கு சுற்றறிக்கை

பத்திரப்பதிவில் சந்தை மதிப்பு வழிகாட்டி நெறிமுறை வெளியீடு: மண்டல டிஐஜிகளுக்கு சுற்றறிக்கை

by Neethimaan

 

வேலூர், ஜூலை 9: பத்திரப்பதிவு துறையில் அரசுக்கு உரிய வருவாய் கிடைப்பதற்காக சந்தை மதிப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அனைத்து பதிவு மண்டல டிஐஜிகளுக்கு, ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய முத்திரை சட்டப் பிரிவு 47A-ன் கீழ் குறிப்பிடப்பட்ட கிரையம், பரிவர்த்தனை, பினாமி விடுதலை மற்றும் ஏற்பாடு ஆவணங்களில் உரிய சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யாததால் அரசுக்கு கிடைக்கப்பெறும் வருவாய் தடுக்கப்படுகிறது. இதனை தடுத்து அரசுக்கு உரிய வருவாய் கிடைக்க வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இதன்படி ஆவணத்தில் சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் மனை மதிப்பு இருக்கும் நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும்போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80 சதவீதம் கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம் செய்யப்படும். மதிப்பு விவரத்தை சம்பந்தப்பட்ட துணைப் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

ஆவணத்தில் சொத்து விவசாய நிலமாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் விவசாய நில மதிப்பு இருக்கும் நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80 சதவீதம் கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு நிர்ணயம் செய்யப்படும் மதிப்பு விவரத்தை சம்பந்தப்பட்ட துணைப் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

ஆவணத்தில் சொத்து விவசாய நிலமாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டில் மனை மதிப்பாக இருந்து, இடமும் விவசாய நிலமாக இருக்கும் நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) இடப்பார்வையிட்டு விவசாய நிலமாக மதிப்பு நிர்ணயம் செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 50 சதவீதம் கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம் செய்யும் மதிப்பு விவரத்தை சம்பந்தப்பட்ட துணைப் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

சம்பந்தப்பட்ட துணைப் பதிவுத்துறை தலைவர், இடப்பார்வை செய்து மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) நிர்ணயம் செய்த மதிப்பு முறையாக இருப்பின் அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு நிர்ணயம் செய்யும் மதிப்பு சரியாக இல்லாத பட்சத்தில் விசாரணை படியான சரியான மதிப்பினை நிர்ணயம் செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியருக்கு (முத்திரை) பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

3 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi